தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு

வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா?

பகுதி :5



வாகனக்கூட்டம் சம்பந்தமாக வரும் பிற ரிவாயத்துகள் :

ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பதுபோல வாகனக்கூட்டம் சம்பந்தமாக வரும் அறிவிப்புகளில் முழுமையாக வரும் ரிவாயத்தின் மொழிபெயர்ப்புகளை இங்கு பயன்படுத்தி ஆய்வுசெய்துள்ளோம். இருப்பினும் வேறுசில ஹதீஸ்கிதாபுகளின் ரிவாயத்துகளைப் பற்றி சொல்லவில்லையே என்று எவரும் சந்தேகிக்கக் கூடாது என்பதற்காக அவைகளையும் மூலமொழியோடு இங்கு பதிக்கின்றோம்.

வாகனக்கூட்டம் சம்பந்தமாக வரும் அனைத்து அறிவிப்புகளையும் அபூஉமைர் பின் அனஸ் என்பவர் மட்டுமே அறிவிப்பதாக கூறப்பட்டுள்ளன. அபூஉமைருக்கு உமூமத் வழியாக இந்த அறிவிப்பு கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. உமூமத் என்ற பதத்திற்கு அவருடைய தந்தையின் சகோதரர், அல்லது சகோதரி, அல்லது சகோதரர்கள் என்று எப்படியும் பொருள் கொள்ளலாம் என கூறப்பட்டு வருகின்றது.

உமூமத் என்ற சொல்லிற்கு எப்படி பொருள் கொள்ள வேண்டும் என்பதையும், இப்படி பொருள் கொண்டால்தான் சரியானது என்பதையும் குர்ஆன் சுன்னா வழியில் நிரூபிப்பது இந்த அறிவிப்பை சரிகாண்பவர்களின் கடமையாகும். இதோ மற்ற ரிவாயத்துகள்.

ஒரு பயணக் கூட்டம் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நேற்று பிறையைக் கண்டதாக அவர்கள் சாட்சி கூறினர். அப்போது அவர்களை நோன்பை விட்டுவிடுமாறும் மேலும் காலைப் பொழுதில் தொழுமிடத்திற்கு அவர்கள் செல்லுமாறும் நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு கட்டளையிட்டார்கள் என நபித் தோழர்களில் உள்ள அவரின் (அபூஉமைரின்) தந்தையின் சகோதரிடமிருந்து (அல்லது சகோதரி / சகோதரர்களிடமிருந்து) அபூ உமைர் இப்னு அனஸ் என்பவர் அறிவித்தார். நூல்: அபூதாவூத் - 1159.

ஒரு சமூகத்தார் பிறையைக் கண்டனர். எனவே அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அச்சமயம் அவர்களை பகல் நேரம் உயர்ந்த பின்னர் நோன்பை விட்டுவிடுமாறும் மேலும் மறுநாளில் பெருநாளிற்கு அவர்கள் செல்லுமாறும் நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவரின் (அபூ உமைரின்) தந்தையின் சகோதரிடமிருந்து (அல்லது சகோதரி / சகோதரர்களிடமிருந்து) அபூ உமைர் இப்னு அனஸ் என்பவர் அறிவித்தார். நூல்: ஸுனன் நஸாயி - 1756.

நம் மீது ஷவ்வால் பிறை மறைக்கப்பட்டதுபோது நோன்பை நோற்றவர்களாக காலைப் பொழுதை அடைந்தோம். திடீரென ஒரு வாகனக் கூட்டம் பகலின் இறுதியில் வந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நேற்று பிறையைக் கண்டதாக சாட்சி கூறினார்கள். அப்போது அவர்களை நோன்பை விட்டுவிடுமாறும், மேலும் மறுநாள் அவர்களின் பெருநாளிற்கு அவர்கள் செல்லுமாறும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என அன்சாரி நபித் தோழர்களில் உள்ள என் தந்தையின் சகோதரர் (அல்லது சகோதரி / சகோதரர்கள்) அறிவித்ததாக அபூ உமைர் இப்னு அனஸ் என்பவர் அறிவித்தார். ஸுனன் இப்னு மாஜா - 1653.

அனஸ் அவர்களின் தந்தையின் சகோதரர் (அல்லது சகோதரி / சகோதரர்கள்) நபி(ஸல்) அவர்களிடம் பிறையைக் கண்டதாக சாட்சி கூறினார்கள். அப்போது நபியவர்கள் மக்களை நோன்பை விட்டுவிடுமாறும் மறுநாளில் அவர்களின் பெருநாளிற்கு செல்லுமாறும் மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். என அனஸ் அவர்கள் அறிவித்தார். முஸ்னத் அஹ்மது - 14006.

இந்த அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் ஸயீத் பின் ஆமீர் என்பவருக்கு வஹம் (அதாவது சந்தேகத்துடன் ஹதீஸை இணைத்துவிடுவது) ஏற்பட்டுள்ளது என அபூஹாதிம் அர்ராஜி, அபுல் ஹஸன் அத்தாரக்குத்னீ போன்றோர் கூறுகின்றார்கள். நிச்சயமாக இந்த அறிவிப்பு அபூஉமைருடைய உமூமத் வாயிலாக வரும் அறிவிப்பு என்றே அறியப்பட்டுள்ளது. அல்லாஹ்வே மிக்க அறிந்தவன் என நூலாசிரியரான நான் கூறுகிறேன். (அல்அஹாதீஸ் அல்முக்தாரஹ் 3-93 ).

أن عمومة له شهدوا என்ற வாசகம் மேற்காணும் ரிவாயத்தில் உள்ளதை காண்கிறோம். அதாவது அனஸ் என்ற மற்றொரு நபர் தம் உமூமத்தினர் வழியாக இதை அறிவிப்பததாக வருகிறது. இந்த வாகனக்கூட்டம் சம்பந்தமான அறிவிப்பு யாருடைய உமூமத்தினர் வழியாக அறிவிக்கப்பட்டது என்ற கேள்வியும் தற்போது எழுகிறது. அது அபூ உமைரின் உமூமத்தா? அல்லது அனஸின் உமூமத்தா? என்று இருக்கின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் உமூமத்து பிரச்சனையும் புதிதாக முளைக்கிறது.

இந்த ஹதீஸில் ஸயீத் பின் ஆமீர் என்பவர் தவறு இழைத்துவிட்டார். இன்னும் ஷுஃபா அபூ பிஷ்ர் இடமிருந்தும், அபூபிஷ்ர் அபூஉமைரிடமிருந்தும் அறிவித்துள்ளார்கள் என்றே உள்ளது. (முஸ்னத் பஜ்ஜார் - 2-338).

ஸயீத் பின் ஆமீர் என்பவரை குறித்து ஹதீஸ்கலை அறிஞர்களின் கூற்று :

அவர் ஒரு நல்ல மனிதர் மேலும் அவரின் ஹதீஸில் சில தவறுகள் உள்ளன என அபூ ஹாதிம் அர்ராஜீ அவர்கள் கூறினார்கள்.

சில சமயம் கற்பனை செய்பவர் என அபூ ஹாகிம் அவர்கள் கூறினார்கள்.

அவர் நல்லவர் நம்பகமானவர் என இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

அதிக தவறு செய்பவர் என இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

அவர் நல்லவர் நம்பகமானவர் என வாகிதீ அவர்கள் கூறினார்கள். (பார்க்க : தஹ்தீபுல் கமாலில் அறிவிப்பாளர் எண் - 2300)

ஒரு பயணக் கூட்டம் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தாங்கள் அதை – (அதாவது பிறையை - அறிவிப்பாளரின் வாசகமாக இடம் பெற்றுள்ளது) நேற்று கண்டதாகக் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் நோன்பை விட்டுவிடுமாறும் மறுநாளில் அவர்கள் பெருநாள் கொண்டாடச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். என நபித்தோழர்களாகிய தம் தந்தையின் சகோதரர் (அல்லது சகோதரி / சகோதரர்கள்) அறிவித்ததாக அபூ உமைர் இப்னு அனஸ் என்பவர் அறிவித்தார். பகலின் இறுதியில் என நான் கருதுகிறேன் என்பதாக ஷுஃபா அவர்கள் கூறினார். முஸ்னத் அஹ்மது - 20598.

நபி (ஸல்) அவர்களிடம் ளுஹருக்குப் பிறகு உமூமத்தினர் பிறையைக் கண்டதாக ஆதாரத்தை வைத்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர்களை நோன்பை விட்டுவிடுமாறும் மறுநாளில் அவர்கள் தொழுமிடத்திற்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். என நபித் தோழர்களாகிய தம் தந்தையின் சகோதரர் (அல்லது சகோதரி / சகோதரர்கள்) கூறியதாக அபூ உமைர் என்பவர் அறிவித்தார். (அல் ஃபவாயிது அஷ்ஷஹீர் பில் கையிலானியாதி – 211).

நம் மீது ஷவ்வால் பிறை மறைக்கப்பட்டது. அப்போது நோன்பை நோற்றவர்களாக காலைப் பொழுதை அடைந்தோம். திடீரென ஒரு வாகனக்கூட்டம் பகலின் இறுதியில் வந்தனர். நபி (ஸல்) அவர்களிடம் நேற்று பிறையைக் கண்டதாக அவர்கள் சாட்சி கூறினர். அப்போது அவர்களை நோன்பை விட்டுவிடுமாறும் மேலும் மறுநாள் அவர்களின் பெருநாளிற்கு அவர்கள் செல்லுமாறும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுக்கு கட்டளையிட்டார்கள் என அன்சாரி நபித் தோழர்களில் உள்ள என் தந்தையின் சகோதரர் (அல்லது சகோதரி / சகோதரர்கள்) அறிவித்ததாக அபூ உமைர் இப்னு அனஸ் என்பவர் அறிவித்தார்.

மேலும், மறுநாள் அவர்கள் செல்லவில்லை என இமாம் அபூ ஹனீஃபா அவர்கள் கூறினார்கள். ஸுனன் இப்னு அபி ஷைபா - 37336.

நிச்சயமாக உமூமத்தினர் ரமழான் மாதத்தின் ஒரு நாள் நோன்பு நோற்றனர். ஒரு பயணக் கூட்டத்தினர் பகலின் இறுதியில் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நேற்று பிறையைக் கண்டதாக அவர்கள் சாட்சி கூறினர். அப்போது அவர்களை நோன்பை விட்டுவிடுமாறும் மேலும் மறுநாளில் அவர்களின் தொழுமிடத்திற்கு அவர்கள் செல்லுமாறும் நபியவர்கள் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என நபித் தோழர்களில் உள்ள அவரின் தந்தையின் சகோதரர் (அல்லது சகோதரி / சகோதரர்கள்) இடமிருந்து அபூ உமைர் இப்னு அனஸ் என்பவர் அறிவிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுருக்கிறது. முஸ்னத் இப்னு அல்ஜஅது - 1712.

மேற்கூறப்பட்டபடி பல ரிவாயத்துகள் இந்த வாகனக்கூட்டம் சம்பந்தமாக வந்துள்ளன. மேற்கண்ட அறிவிப்புகளின் அறிவிப்பாளர்வரிசை மற்றும் இச்செய்தியின் தரம் முதலியவற்றை ஆய்வுசெய்ததிலேயே பல பிரச்சனைகளை தன்னகத்தே கொண்ட இந்த அறிவிப்பு பலவீனம்தான் என்பது நிரூபணமாகிவிட்டது.

இருப்பினும் இச்செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளர்களின் அறிவிப்பு விதங்களையும், முரண்பாடுகளையும் தெரிந்துகொண்டால் இந்த முர்ஸலான அறிவிப்பின் பலவீனமான நிலையை இன்னும் தௌ;ளத் தெளிவாக விளங்க முடியும். அதற்கு முன்னர் இந்த அறிவிப்பை அறிவிக்கும் அபூஉமைரைப் பற்றியும், அவரிடமிருந்து அறிவிக்கும் அபூ பிஷ்ரைப் பற்றியும் இன்னும் விரிவாக அறிந்து கொள்வோம்.



இன்ஷா அல்லாஹ் தொடரும்....



நன்றி : இந்திய ஹிஜ்ரி கமிட்டி

Website : www.mooncalendar.in

[பதிவேற்றிய நாள் : 13-04-2013]