நபி (ஸல்) காலத்தில் மக்காவும், மதீனாவும் ஒரே தேதியில் இருந்ததற்கு என்ன ஆதாரம்? - TNTJ அதிரடி கேள்வி..!!

TNTJ இயக்கத்தின் கேரளா, இலங்கை, மற்றும் வளைகுடா கிளையினர் இவ்வருடம் (ஹிஜ்ரி 1438) ரமழான் முதல் நோன்பை கடந்த 2017 மே மாதம் 27-ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்கினர். தமிழ்நாட்டு TNTJ வினரோ அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை தொடங்கினர். தலைமையின் முரண்பாடுகளையும், தவறுகளையும் திருத்துவதற்கு முன்வராத TNTJ வினர், சுமார் 1400 வருடங்களுக்கு முன்னர் மக்காவிலும், மதீனாவிலும் ஒருகிழமைக்கு (நாளுக்கு) ஒரே தேதி இருந்ததா? என்று கேள்வி எழுப்பியுள்ளது நகைப்புக்குரியது.

நபிகளார் காலத்தில் ஒருநாளுக்கு மக்காவில் ஒரு தேதியும், அதே நாளுக்கு மதீனாவில் மற்றொரு தேதியும் இருந்ததா? என்று ஒரு சகோதரர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு TNTJ பிறைவாசி மக்காவும் மதீனாவும் ஒரே தேதியில் இருந்ததற்கு என்ன ஆதாரம்? என்று திருப்பி கேட்டுள்ளார்.

அல்குர்ஆன் (2:189) வசனத்தின் படி பிறைகள் மனிதர்களின் தேதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளதால், இன்னும் சந்திரன் துல்லியமாகவும் இயங்குவதால் (55:5), மக்காவிலும் மதீனாவிலும் ஒரே நாளுக்கு வெவ்வேறு தேதிகள் இருக்க முடியாது, அப்படி இருக்க வாய்ப்பே இல்லை என்று மார்க்க அடிப்படை தெரிந்தவர்களுக்கு விளங்கும். TNTJ பிறைவாசிகளுக்கு இது விளங்காமல் இருப்பது ஆச்சரியமில்லை. சத்தியத்தையே பின்பற்றுவோம் என்ற சிந்தனையுடைய நேர்மையாளர்கள் யாரும் TNTJவில் இருந்தால் அவர்கள் விளங்கிக் கொள்வதற்கே இதையும் விளக்குகிறோம்.

நபி (ஸல்) அவர்கள் தங்கள் இறுதி ஹஜ்ஜின் போது மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்காவுக்குள் வந்து தங்கள் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றினார்கள். எத்தகைய தேதி வித்தியாசங்களும் மக்காவுக்கும், மதீனாவுக்கும் இடையே அன்று இருக்கவில்லை. பிற பிரதேசங்களிலிருந்தும் நபித்தோழர்கள் வருகை புரிந்தனர். மக்காவில் வைத்து, நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜூக்குரிய இஹ்ராமில் இணைந்த நபித்தோழர்களும் இருந்தனர். அந்த அனைத்து நபிதோழர்களும் நபி (ஸல்) அவர்களோடு ஒற்றுமையுடன் ஒரே தேதியில்தான் ஹஜ்ஜூ செய்தனர். ஹஜ்ஜின் அனைத்து கிரியைகளையும் ஒன்றுபட்டே நிறைவேற்றினர். மக்காவிலும், மதீனாவிலும் வெவ்வேறு தேதிகள் வித்தியாசப்பட்டு இருந்திருந்தால் ஹஜ்ஜூக்காக பிரயாணம் செய்து மக்கா வந்த நபி (ஸல்) அவர்களுக்கும், ஸஹாபாக்களுக்கும் இச்செய்தி தெரிவிக்கப்பட்டிருக்கும். அத்தகைய எந்தக் குறிப்புகளும் ஹதீஸ்களில் இல்லவே இல்லை.

இதை உறுதிப்படுத்தும் விதமாக நபி (ஸல்) அவர்கள் தங்கள் இறுதிப் பேருரையில்கூட 'இந்த நாள் எந்த நாள்?' என்று கேள்வி கேட்டு, அந்த நாள் முஸ்லிம்கள் அறுத்துப் பலியிடும் 'யவ்முன்நஹர்' – அது துல்ஹஜ்ஜூ 10-ஆம் நாள் என்பதை உறுதியும் படுத்தினார்கள் (புகாரி 1740, 1741). மக்கா மதீனாவிடையே வெவ்வேறு தேதிகளாக வித்தியாசப்பட்டு இருந்திருந்தால் அல்லாஹ் வஹியை இறக்கி நபி (ஸல்) அவர்களுக்கு அப்போது விஷயத்தை சொல்லியிருப்பான். அல்லது 'நபியே அது மதீனாவின் தேதியாகும், இன்று மக்காவில் வேறு தேதி அல்லவா' என்று கூடியிருந்த ஸஹாபாக்கள் சொல்லியிருப்பார்கள். எந்த ஒரு ஸஹாபியும் அப்படி சொல்லிடவில்லை. மக்காவில் ஒரு தேதியும், மதீனாவில் மற்றொரு தேதியும் இருந்திருக்க வேண்டும் என்று TNTJ பிறைவாசிகள் நம்புவது அவர்களின் வடிகட்டிய மனோ இச்சையே ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் தங்கள் இறுதிப் பேருரையில் இன்று 'யவ்முன்நஹர்தான்' என்று உறுதிப்படுத்திய நிகழ்வு இன்றைய TNTJ வினரின் மனோ இச்சைக்கு பதில் சொல்வதுபோல இருக்கிறது - ஸூப்ஹானல்லாஹ். ஆக மக்காவிலும், மதீனாவிலும் ஒரே நாளுக்கு வெவ்வேறு தேதிகள் வித்தியாசப்பட்டு இருக்கவேயில்லை என்பது உறுதியாகி விட்டது.

மக்காவிலும், மதீனாவிலும் வெவ்வேறு தேதிகள் இருந்தன என்று TNTJ வினர் இனியும் வாதித்தால், மதீனாவிலிருந்து வருபவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு நிர்னயிக்கப்பட்ட மீக்காத்தில் (துல்குலைஃபாவில்) எந்த தேதி இருந்திருக்கும்? மக்காவின் தேதியா? மதீனாவின் தேதியா?. பிற மீக்காத்துகளில் என்ன தேதி இருந்திருக்கும்? என்பதற்கும் விளக்கம் சொல்லட்டும்.

பிறை விஷயத்தில் குர்ஆனிலிருந்தும், சுன்னாவிலிருந்தும் நேரடியாக ஆதாரங்களை நாம் எவ்வளவுதான் விளக்கினாலும் TNTJவிலுள்ள பெரும்பாலோர் சத்தியத்தை ஒருபோதும் உணர மாட்டார்கள். ஹஜ்ஜூவுடைய தேதிகளை நாங்கள் கேட்கவில்லை ரமழானுடைய தேதிகள் எப்படி இருந்தன? என்று மீண்டும் விதண்டா வாதத்தையே புரிவார்கள். ரமழானுடைய தேதிகளிலும் எந்த மாறுபாடுகளுமில்லை என்று நாம்; நிரூபித்தாலும்கூட அதில் திருப்தி அடைய மாட்டார்கள். நாங்கள் நோன்பைப் பற்றி கேட்கவில்லை, மாறாக மக்கா மதீனாவில் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடினார்களா? என்று அடுத்த கேள்விக்கே தாவுவார்கள். காரணம் அவர்களின் இயல்பும் பயின்ற பாசறையும் அப்படி..! யார் சொன்னால் TNTJ வினர் கண்மூடி நம்புவார்கள் என்பதையும் நம் அனைவரும் அறிவோம்.

visit: www.mooncalendar.in