சிரியாவிலிருந்து வந்த குரைபின் பிறைத் தகவலை மதீனாவிலிருந்த இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தமைக்குக் காரணம், இரண்டு ஊர்களுக்கும் இடையே உள்ள அதிக தூர வித்தியாசம்தான் என்பது TNTJவின் ஆய்வு முடிவு. இதனால்தான் தமிழ்நாட்டைத் தாண்டி அதிக தொலைவிலிருந்து வரும் பிறைத் தகவலை TNTJ தலைமை ஏற்றுக் கொள்வதில்லை.
சிரியாவுக்கும் (டமஸ்கஸ்), மதீனாவுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 1050 கிலோ மீட்டர் ஆகும். அதுபோல உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள இரு ஊர்களான 'சாஹாரன்பூர்' (Saharanpur) மற்றும் 'வெயின்தம்கன்ஜ்' (wyndhamganj) ஆகியவற்றுக்கிடையேயுள்ள தூரம் சுமார் 1100 கிலோமீட்டர்களை தாண்டும். சற்றொப்ப சிரியாவுக்கும் மதீனாவுக்கும் இடையேயுள்ள தூரத்தை இது ஒத்திருக்கிறது. இதுபோன்று ஒரு மாநிலத்துக்குள்ளேயே 1000 கிலோ மீட்டர்கள் இடைவெளியில் இன்னும் பல ஊர்கள் உள்ளன.
நமது கேள்வி என்னவெனில் உத்திரபிரதேச மாநிலத்தின் 'சாஹாரன்பூரில்' பார்க்கப்பட்ட பிறையை அதே மாநிலத்தின் 'வெயின்தங்கன்ஜூ' மக்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா? மேற்படி இரு ஊர்களுக்கும் இடையேயுள்ள தூரம், சிரியா மதினாவுக்கு இடையேயுள்ள தூரத்தைபோல் இருப்பதால் TNTJ கொள்கை முடிவின்படி வெயின்தங்கன்ஜூ மக்கள் நிராகரிக்கத்தானே முடியும்? எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? குரைப் சம்பவத்தை வைத்து பிறை பார்க்கும் எல்லை ஒரு மாநில அளவுதான் (தமிழ்நாடு) என்ற TNTJயின் முடிவானது, நமது நாட்டிலுள்ள மற்றொரு மாநிலமான உத்திரபிரதேசத்துக்கே பொருந்தவில்லையே? சிந்திக்க மாட்டீர்களா?
மேலும், பிறைகள் மனிதர்களுக்கு நாட்காட்டி (காலண்டர்) என்று வல்ல அல்லாஹ் குர்ஆனில் (2:189) கூறுகிறான். காலண்டரில் ஒரு நாளுக்கு, ஒரு தேதிதான் இருக்கும். அதாவது வெள்ளிக் கிழமைக்கு ஒன்றாம் தேதி என்றால், சனிக்கிழமைக்கு இரண்டாவது தேதியாகத்தான் இருக்கும். இந்நிலையில் ரமழான் முதல் தேதி சிரியாவில் ஒரு நாளிலும், மதீனாவில் மற்றொரு நாளிலும் வேறுபட்டு தொடங்கியதாக இந்த குரைப் சம்பவம் கூறுகிறது.
அதாவது பிறை பார்த்ததின் அடிப்படையில் ரமழான் முதல் தேதியானது இரண்டு வெவ்வேறு கிழமைகளில் வந்துள்ளதாக குரைப் சம்பவம் கூறுவதிலிருந்து, சிரியா மக்களுக்கு ஒரு தேதியையும், மதீனா மக்களுக்கு மற்றொரு தேதியையும் பிறை காட்டியுள்ளது. இப்படி சந்திரன் தேதிகளை சரியாக காட்டவில்லை என்றும் அது துல்லியமாக இயங்கிடவில்லை என்றும் பொருள்படுகிறது. அப்படியனால் பிறைகள் மனிதர்களுக்கு நாட்காட்டி என்ற அல்குர்ஆன் (2:189) வசனத்திற்கும், சந்திரன் கணக்கின்படி துல்லியமாக இயங்குகின்றது என்ற அல்குர்ஆன் (55:5, 6:96) வசனங்களுக்கும் நேர் முரணாக அமைகிறது.
TNTJயின் கொள்கை முடிவின்படி ஒரு ஸஹீஹான ஹதீஸாகவே இருந்தாலும், குர்ஆன் ஆயத்துக்கு அது முரண்பட்டால் அந்த ஹதீஸை மறுக்க வேண்டும். ஆகையால் குரைபுடைய சம்பவத்தை தங்களின் மாநிலப்பிறை நிலைபாட்டுக்கு ஆதாரமாக TNTJயினர் இனியும் பிரச்சாரம் செய்வது நியாயம்தானா? என்று சிந்திப்பீர்.
இன்னும் குரைபுடைய சம்பவத்தின்படி கலீஃபா முஆவியா (ரழி) அவர்கள் பிறை பார்த்ததை, கலீஃபாவின் ஆளுமையின்கீழ் கவர்னராக இருந்த இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. ஆட்சித்தலைவரின் பிறை நிலைப்பாட்டையே அவரின் கீழ் பணியாற்றிய கவர்னர் மறுத்துள்ளார். எனவே எந்த ஒரு ஆட்சிப் பொறுப்போ, அதிகாரங்களோ இல்லாத TNTJ தலைமையின் பிறை அறிவிப்பை, TNTJ யின் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தமோ, கட்டாயமோ இல்லை. மாறாக தலைமையின் பிறை நிலைபாட்டை மறுக்கத்தான் வேண்டும் என்பதற்குத்தான் இந்த குரைப் சம்பவம் ஆதாரமாக அமைகிறது. நமது இயக்கத்தின் பிறை நிலைபாட்டுக்கு எதிராக எழுதியுள்ளார்களே என்ற ரீதியில் அணுகிடாமல் நேர்வழியைத்தான் பின்பற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கில் சிந்திப்பவர்களுக்கு இந்த சத்தியம் புரியும்.
தமிழக எல்லைக்குள் மட்டுமே பிறையை பார்க்க வேண்டும் என்ற தங்களின் பிடிவாதக் கொள்கைக்கு மலைபோல நம்பியிருந்த இந்த குரைபுடைய சம்பவமும் ததஜவுக்கு எதிரான ஆதாரமாகத் திரும்பியதால், குரைபுடைய சம்பவத்தை தூர எல்லைக்கு ஆதாரமாக நாங்கள் சொல்லவே இல்லை என்று பிறைவாசிகள் துணிந்து மறுக்கின்றனர். இது பீஜேயின் கூற்றுக்கே முரணான கருத்தாகும்.
இன்னும் எங்கள் பகுதியில் நாங்கள் பிறைபார்ப்போம் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் சொல்லியதை மட்டுமே குரைப் விஷயத்தில் நாங்கள் ஆதாரமாகக் கூறுகிறோம் என்றும் ததஜ பிறைவாசிகள் தற்போது உளறுகின்றனர். இந்த வாதத்தின் படி தற்போதைய தமிழகப்பிறையிலிருந்து கீழிறங்கி 'தத்தமது ஊர்பிறை' என்ற நிலைப்பாட்டிற்கே ததஜவினர் செல்ல வேண்டும். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான் நம் நினைவுக்கு வருகிறது.
குரைபுடைய சம்பவத்தை பற்றிய ஆய்வுகளை மேலும் படிக்க : Click here