குர்ஆனை மறுக்கும் பீஜேயின் பிறைவாசிகள்..!!

பிறை விஷயத்தில் தனது தவறை திருத்திக் கொள்ள முன்வராத ததஜ தலைமை, 'பிறைவாசி' என்ற புனைப்பெயரில் ஹிஜ்ரி கமிட்டியினரை திட்டி தீர்ப்பதற்காக சில இளைஞர்களை ஏற்பாடு செய்தனர். வளர்த்த கிடா மார்பில் பாய்ந்ததடா என்பதைப் போல, பீஜேயின் தம்பிமார்கள் அண்ணனுக்கே பாடம் நடத்தியதை 'பீஜே VS பிறைவாசி' என்ற நமது முந்தைய பதிவில் கண்டோம். பிறை விஷயத்தில் இந்த ததஜ பிறைவாசிகள் குர்ஆன் ஆயத்துக்களை எப்படி எல்லாம் மறுக்கிறார்கள் என்பதை சுருக்கமாக விளக்கவே இந்த பதிவு..

பிறைவாசி : பிறைகளின் வடிவங்களை வைத்து தேதியை வரையறுக்க இயலாது. சந்திரனை வைத்து ஒரு நாட்காட்டியை தயாரிக்கவே முடியாது.

பதில் : அல்குர்ஆன் 2:189-வது வசனம் பிறைகள் மனிதர்களுக்கு தேதிகளை காட்டக்கூடியது, ஹஜ்ஜையும் அறிவிக்கும் என்று தெளிவாகக் கூறுகிறது. குர்ஆனின் நேரடியான பொருளை திரித்து ஃபித்னாவை பரப்புவதற்குத்தானே பிறைவாசிகள் களம் இறக்கப்பட்டார்கள். தங்கள் திருப்பணியை செவ்வனே செய்வதை மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.

பிறைவாசி : சந்திரனின் சுழற்சியை வைத்து ஆண்டுகளை கணக்கிட இயலாது. சந்திரனை அல்லாஹ் அப்படித்தான் படைத்துள்ளான்.

பதில் : அல்குர்ஆன் 10:5–வது வசனம் ஆண்டுகளின் எண்ணிக்கையும், கணக்கையும் அறிந்து கொள்வதற்காக சந்திரனுக்கு பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) விதியாக்கியுள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். பிறைவாசிகளோ இல்லை இல்லை, முடியவே முடியாது என்று மல்லுக்கட்டுகின்றனர். இஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டரை யூதக்காலண்டர் என்று கூறிவிட்டதால் சந்திரனின் சுழற்சியை வைத்து ஆண்டுகளை கணக்கிட இயலாது என்று சாதிக்கத்தானே வேண்டும்.

பிறைவாசி : ஆண்டுகளை கணக்கிட சூரியனின் மன்ஸிலை பயன்படுத்தலாம் என்று 10:5 வசனம் கூறுகிறது.

பதில் : ஓஹோ..அப்படியா செய்தி..!! சந்திரக் காலண்டர் இருக்கக்கூடாது என்று அண்ணன் சொல்லிவிட்டதால் ஏற்பட்ட கொள்கை முடிவா இது? ஒரு மாதத்துக்கு 29 அல்லது 30 நாட்கள்தான் இருக்க வேண்டும் என்ற நபியின் (ஸல்) கட்டளைக்கு இணங்க, சூரியனுக்கு இருப்பதாக நீங்கள் கூறும் அந்த மன்ஸிலை வைத்து ஒரு காலண்டரை தயாரித்து தாருங்களேன் பிறைவாசிகளே..!

அல்குர்ஆனின் 10:5-வது வசனத்தில் 'கத்தரஹூ மனாஸில' என்று சந்தினின் மன்ஸிலைக் குறித்து ஆண்பால் ஒருமையில்தான் குர்ஆன் கூறுகிறது. ஹிஜ்ரி காலண்டரை மறுப்பதற்காக சூரியனையும் வம்புக்கு இழுத்துள்ளனர் பிறைவாசிகள். இனி சூரியனைப் பார்த்து நோன்பு நோருங்கள், சூரியனைப் பார்த்து நோன்பை விடுங்கள் என்ற புதிய வஹியை அறிவிக்கவும் கூடும். வஹியை மட்டும் பின்பற்றும் கூட்டமல்லவா பிறைவாசிகள்..!!

பிறைவாசி : சந்திரனானது உலகின் ஒரு சாராருக்கு ஒரு தேதியையும், மற்றொரு பகுதிக்கு வேறு தேதியையும் காட்டும். அமாவாசை என்பது இரண்டு நாளில் நடக்கும்.

பதில் : ஒவ்வொரு நாளுக்கும் ஒரேயொரு தேதி என்பதுதான் ஒரு காலண்டரின் சாதாரண அடிப்படை. வெள்ளிக்கிழமை என்ற ஒரு நாளுக்குள்ளேயே நாம் ஜூம்ஆ தொகையை நிறைவேற்றி விடுகிறோம். வெள்ளிக்கிழமை என்ற அந்த ஒரு நாளுக்கு இரண்டு தேதிகள் எப்படியாவது வந்துவிடாதா என்று பிறைவாசிகள் ஏங்குவது நமக்கு புரிகிறது.

ஏற்கனவே இந்துக்களின் பஞ்சாங்கங்களை ஹலால் என ததஜ பிறைவாசிகள் அறிவித்து விட்டார்கள். மேலும் மேஷம், ரிஷபம், மிதுனம், துலாம், மகரம், கடகம், கன்னி, விருச்சிகம், கும்பம், சிம்மம் போன்ற ராசிகளும் இஸ்லாத்தில் உள்ளவைதான் என்று பக்கம் பக்கமாக கட்டுரைகளையும் வரைந்து தள்ளிவிட்டார்கள்.அதைப் படித்த ததஜவினர் பலர் முகம் சுளிக்கவே, எதிர்ப்புகளுக்கு அஞ்சி அக்கட்டுரையை நைசாக நீக்கிவிட்டனர் பிறைவாசிகள். தற்போது அமாவாசை என்பது இரண்டு நாளில் நடக்கும் என்று புனைவதும், இந்துக்களின் பஞ்சாங்க அடிப்படையிலான அமாவாசை நம்பிக்கையை வேறு லேபிளில் முஸ்லிம்களிடம் புகுத்தும் நரித்தந்திரம்தானே தவிர வேறில்லை.

அல்குர்ஆன் 55:5, 6:96 போன்ற வசனங்கள் சந்திரன் துல்லியமான கணக்கின்படி உள்ளதாகவும், அவை கணக்கிடும்படி உள்ளதாகவும் கூறுகிறது. சந்திரனானது ஒருநாளுக்கு ஒருசாராருக்கு ஒரு தேதியையும், மற்றொரு பகுதிக்கு வேறு தேதியையும் காட்டும் என்று பிறைவாசிகள் சொல்வது சந்திரனின் துல்லியமாக இயங்கிடவில்லை என்று பொருள்படும். மேற்கண்ட அல்குர்ஆன் வசனங்களுக்கு நேர்முரணாக இவர்களின் கூற்று அமைகிறது.

பிறைவாசி : தமிழகத்திலுள்ள மஸ்ஜிதுகள் கிப்லாவை சரியாக முன்னோக்கும் அளவில் கட்டப்படவில்லை. சுமார் 5 டிகிரி அளவுக்கு மாறுபட்டு உள்ளது.

பதில் : அண்ணன் ஃபேமஸ் ஆகியதே பாபர் மசூதி இடிப்பு போராட்டங்களை வைத்துதான். ஆர்.எஸ்.எஸ் காரர்கள் எந்த பள்ளிவாசல்களிலும் தற்போதைக்கு கைவைக்க மாட்டார்கள் என்பதால் நாம்தான் அவர்களின் களப்பணியை கையில் எடுத்து செயல்பட வேண்டும் என்று பிறைவாசிகள் முடிவெடுத்து விட்டார்கள் போலும். அப்போதுதான் நாமும் அண்ணனைப் போல ஃபேமஸ் ஆகலாம் என்ற திட்டமோ என்னவோ? மாட்டுக்கறி விஷயத்தில் பிஜேபி அரசை வன்மையாக கண்டித்த பக்கீர் முஹம்மது அல்தாபியை மிரட்டி ததஜவின் தலைமை பதவியிலிருந்து ஓரங்கட்டி தஃவாவை விட்டே விரட்டியடித்ததிலிருந்து, பிறைவாசி பீலா மன்னன்களை ததஜ தலைமை இதற்கான பணிகளில் களமிறக்கும் சாத்தியக் கூறுகள் இருப்பது தெரிகிறது. நமது மஸ்ஜிதுகளை நிர்வகிக்கும் கண்ணியத்திற்குரிய ஜமாஅத்தார்கள் மிக கவனமாக இருக்க வேண்டுகிறோம்.

பிறைவாசி : ஹிஜ்ரி கமிட்டியினர் கிப்லாவை மாற்றி விட்டனர்.

பதில் : பிறைவாசிகளின் தலைமைப் பீடமான ஜெரூசலத்திலுள்ள, பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை, இனி மக்காவிலுள்ள கஃபாவை நோக்கித்தான் தொழ வேண்டும் என்று கட்டளையிட்டு கிப்லாவை மாற்றி அமைத்தான் வல்ல அல்லாஹ். நபி (ஸல்) அவர்களின் விருப்பத்திற்கு இணங்க இச்சம்பவம் நடைபெற்றதை அல்குர்ஆனின் 2:142 முதல் 2:150 வரையுள்ள வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஆக கிப்லா மாற்றப்பட்டு சுமார் 1400 ஆண்டுகள் கடந்து விட்டன. இச்சம்பவம் நபி (ஸல்) அர்களின் ஹிஜ்ரத்துக்குப் பின்னர் நடந்ததால் இதுவும் ஹிஜ்ரி கமிட்டியினர் செய்த சதியாகத்தான் இருக்கும் என்ற ஆய்வு முடிவுக்கு ததஜ பிறைவாசிகள் வந்துவிட்டார்கள் போலும்.

குறிப்பு : பிறைவாசிகளின் மூடக் கருத்துக்களை நாம் மக்கள் மத்தியில் இவ்வாறு வெளிச்சம்போட்டு காண்பிக்கும் போதெல்லாம் மேப்படியார்கள் அக்கட்டுரைகளின் வாசகங்களை திருத்தி விடுவார்கள். அல்லது அந்த முழு கட்டுரையையும் தங்கள் பதிவிலிருந்து நீக்கி விடுவார்கள். பிறைவாசிகளின் மேற்கண்ட கருத்துக்களிலும் இனி திருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் ததஜ பிறைவாசிகளின் முகத்திரையை நாம் மேலும் மேலும் கிழித்துக் கொண்டே இருப்போம் - இன்ஷா அல்லாஹ்.

visit: www.mooncalendar.in