தேதிக்கோட்டை மாற்றத் துடிக்கும் ததஜவின் கனவு நிறைவேறுமா?

ததஜவின் பிறை நிலைப்பாடு தமிழகம் என்ற மாநில எல்லைக்குள் பிறையை பார்க்க வேண்டும் அல்லது தமிழக எல்லைக்குள் பிறை தகவலைப் பெற வேண்டும் என்பதே. தங்கள் நிலைப்பாட்டுக்கு ஆதாரங்களை சமர்ப்பிக்க வழியில்லாமல், சர்வதேசத்தேதிக்கோட்டை (International Dateline) மாற்ற வேண்டும் என்று தேவையில்லாத வாதங்களை புரிந்து விஷயத்தை திசை திருப்புகின்றனர்.

மக்காவை பூமியின் மையப் பகுதியாக கொள்ள வேண்டும் என்றும், பூமிப்பந்தில் மக்காவுக்கு நேர் எதிர் முனையில் அமையும் பகுதியை புதிய சர்வதேசத் தேதிக்கோடாக அமைக்கவும் வேண்டும் என்றும் ததஜ பிறைவாசிகள் வாதம் புரிகின்றனர். இதற்காகவே பல கட்டுரைகளை வரைந்தும், வாட்சப் போன்ற சமூக ஊடகங்களில் மாதக்கணக்கில் கருத்துப் பறிமாற்றங்களை செய்து வருகின்றனர். இப்படி வாதிப்பதால்,

தமிழகம் என்ற மாநில அளவு எல்லைக்குள்தான் பிறை பார்க்க வேண்டும் என்ற ததஜவின் நிலைப்பாடு சரியானதுதான் என்றாகிவிடுமா?

மாதத்தின் 29 நாள் பின்னேரம் மஃரிபு நேரத்தில் மேற்குத் திசையில் பிறையை பார்ப்பதுதான் மார்க்கம் சட்டம் என்ற வாதத்தை நிரூபிக்க முடியுமா?

பிறையானது மேற்குத் திசையில் உதித்து கிழக்குத் திசையில் மறைவதாக சகோதரர் பீஜே அவர்கள் சொன்னது சரி என்று நிரூபனம் ஆகிவிடுமா? நடுநிலையான ததஜ சகோதரர்கள் சற்று சொல்லட்டும்.

ததஜ பிறைவாசிகளின் இந்த கூற்றிற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. அதாவது ஹிஜ்ரி நாட்காட்டியின் தேதிகள் அனைத்தும் அந்த சர்வதேசத் தேதிக்கோட்டில் இருந்து தொடங்குகிறது. எனவே அந்த சர்வதேசத்தேதிக் கோடே தவறான இடத்தில் இருக்கிறது என்று சொல்லி விட்டால் ஹிஜ்ரி காலண்டரும் தவறானது என்று நிறுவிவிடலாம் என்ற மனோ இச்சைதான் இவர்களின் இந்த தவறான வாதத்திற்கு அடிப்படை.

ததஜவினரைப் பொருத்தவரையில் தங்களின் மாநிலப்பிறை நிலைப்பாடுதான் சரியானது என்பதை நிறுவுவதற்கு எவ்வித ஆதாரங்களையும் சமர்ப்பிக்க அக்கரை காட்ட மாட்டார்கள். மாறாக ஹிஜ்ரி காலண்டரை ஒழித்து கட்ட வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளில்தான் அவர்களின் பிரச்சாரம் இருந்து வருகிறது.

மேலேயுள்ள படத்தில் உள்ளபடி நயூசிலாந்து நாட்டிற்கு கிழக்கே அமைந்துள்ளது ஃபிஜி தீவுகள். இந்த ஃபிஜி தீவுகளுக்கு கிழக்குப் பகுதியில் மிகஅருகில் இந்த சர்வதேசத்தேதிக்கோடு அமைந்திருக்கிறது. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை என்று வாரத்தின் ஒவ்வொரு நாளுக்குள்ளும் அந்த கிழக்கு பகுதியிலுள்ள மக்கள்தான் முதலில் நுழைவார்கள். இவ்வாறு ஒரு நாள் என்பது இந்த பூமிப்பந்தில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஒவ்வொரு நாடாக வந்து அடைகிறது.

அதாவது ஃபிஜி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என்று கிழக்கு பகுதியிலிருந்து தொடங்கி சிங்கப்பூர், இலங்கை, இந்தியா, சவுதி அரேபியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, அலாஸ்கா, அமெரிக்கன் சமோவா என்று மேற்கு நோக்கி உள்ள ஒவ்வொரு நாடுகளாக ஒரு நாளுக்குள் நுழைந்து விடுகிறது.

நீங்கள் ஹிஜ்ரி காலண்டரை பின்பற்றினாலும், அல்லது வெறுத்து ஒதுக்கினாலும் வல்ல அல்லாஹ் அமைத்துள்ள இந்த விதிமுறையை மாற்ற இயலாது. ததஜ பிறைவாசிகள் இதை மாற்ற வேண்டும் என்கின்றனர். இவர்கள் கிப்லா வசனங்களையும் மனம்போன போக்கில் திரித்து, சர்வதேசத்தேதிக்கோட்டை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். பிறை விஷயத்தில் தமிழக எல்லையையே தாண்டாத இவர்கள் மக்காவைப் பற்றியும், சர்வதேசத்தேதிக் கோட்டை பற்றியும் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?

புனித மக்காவை உலகின் மையப்பகுதியாக (Prime Meridian - பிரதான தீர்க்கரேகை) உலக நாடுகள் அங்கீகரித்து அறிவித்தால்தான் மக்காவுக்கு சிறப்பு வரும் என்ற ரீதியில் இவர்களின் ஆராய்ச்சி அமைந்துள்ளது. இது குறித்து தெளிவான விளக்கங்களை 'உலகின் மையப்பகுதி மக்கா நகரமா? சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா?' என்ற தலைப்பில் அமைந்த இந்த கட்டுரையில் ஏற்கனவே விளக்கியிருக்கிறோம். இக்கட்டுரையை தாங்கள் அவசியம் படித்து உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.

நாம் கேட்பது என்னவெனில், இவ்வாறு மக்காவை மத்தியப் பகுதியாகவும், மக்காவுக்கு நேர்எதிர் முனையில் அமையும் பகுதியை (140 Degree West - Antipode of Makkah) தேதிக் கோடாகவும் வைக்க வேண்டும் என்று,

• அல்குர்ஆனில் கட்டளை இடப்பட்டுள்ளதா?

• நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்களா?

• நபித்தோழர்களில் யாராவது இது போன்ற கருத்தை சொல்லியுள்ளார்களா?

• இவ்வாறு மாற்றம் செய்வதற்கு இஸ்லாமிய ஆட்சியின் கலீஃபாக்கள் முயன்றார்களா?

• முற்கால இமாம்கள் இப்படி ஆய்வு செய்து சொன்னதாக ஒரு வரலாற்று பதிவாவது இருக்கிறதா?


அப்படி ஒரு தகவலும் இல்லை. நாம் இப்படி கேள்வி எழுப்பியுள்ளதால், 'பார்த்தீர்களா கலீஃபாக்களையும், இமாம்களின் கூற்றையும் ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர்' என்று திசை திருப்பிட வேண்டாம். மார்க்கத்தின் மூலாதாரம் குர்ஆனும், சுன்னாவும் மட்டுமே என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அந்த நிலையில் இருந்துதான் மேற்கண்ட கேள்விகளை சிந்திப்பதற்காக கேட்கிறோம்;. எனவே குர்ஆன் சுன்னா கட்டளையிடாத ஒன்றை மார்க்கத்தின் பெயரால் மக்களிடம் திணிக்காதீர்கள் என்கிறோம்.

இன்னும் நாம் கேட்பது என்னவெனில், பூமியின் மையப்புள்ளியாக எதை வைப்பது? ஒரேயொரு இடத்தை தெளிவாகச் சொல்லுங்கள் என்கிறோம். பூமியின் மையப்பகுதியாக இவர்கள் எந்த இடத்தை வைக்கச் சொல்கிறார்கள்?

சுமார் 13 மீட்டர் நீளமும், 11 மீட்டர் அகலமும் கொண்ட புனித கஅபாவை மட்டும் மையப்புள்ளியாக வைக்க வேண்டுமா?

அல்லது தற்போது சுமார் 88 ஏக்கர்கள் பரப்பளவு கொண்ட (விரிவாக்கப்பணிக்குப் பிறகு சுமார் 106 ஏக்கர்களில் அமையும்) புனித ஹரம்ஷரீபு பள்ளிவாசலை மையப் பகுதியாக எடுக்க வேண்டுமா?

அல்லது ஹரமுடைய எல்கையான புனித மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசல் முதல், மினா, முஜ்தலிஃபா, அரஃபா மைதானம் உட்பட மதீனா, ஜித்தா, தாயிஃப் நகர எல்லைகள் 9 உள்ளடங்கிய மீக்காத்தின் எல்லை வரை உள்ள பகுதியை மையப்பகுதியாக வைத்துக் கொள்ளலாமா?

அல்லது சுமார் 1200 சதுர கீலோ மீட்டர்கள் கொண்ட ஒட்டுமொத்த மக்கா நகரையே ஒரு மையப்புள்ளி என்று வைத்து அதற்கு எதிர்பகுதியில் சுமார் 1200 சதுர கீலோ மீட்டர் அளவுக்கு தேதிக்கோட்டை அமைக்க வேண்டுமா? ததஜ பிறைவாசிகள் என்னதான் சொல்கிறார்கள்?

மக்காவை மையப்பகுதியாக அமைக்க வேண்டுமென்றால் இவர்கள் பிரசாரம் செய்யும் (140 டிகிரி மேற்கு) புதிய தேதிக்கோடானது 1200 சதுர கீலோமீட்டர் பரப்பளவில் அமையுமா? அல்லது மக்கா நகரின் கிழக்கு எல்லை முதல் மேற்கு எல்லை வரையுள்ள நீளத்தின் அளவுக்கு தேதிக்கோடும் அதே அகலத்தில் அமையுமோ?

மனோயிச்சைகள் மார்க்கமாகாது. புனித மக்காவை உலகின் மையப்பகுதியாக அமைக்க வேண்டும். பின்னர் மக்காவுக்கு நேர்எதிர் பகுதியை (140 Degree West - Antipode of Makkah) தேதிக் கோடாக அமைக்க வேண்டும் என்ற கருத்து, கேட்பதற்கு இனிமையாகத்தான் இருக்கிறது. அப்படி மாற்றி அமைப்பதற்கு ஹிஜ்ரி கமிட்டியினர்தான் தடையாக இருப்பதைப் போலக் கருதியுள்ளனர். அதனால் இவ்விஷயத்தை மையப்படுத்தி ஹிஜ்ரி நாட்காட்டிக்கு எதிராக பிரச்சாரமும் செய்கின்றனர். இது ஏன்? என்று கேட்கிறோம்.

தற்போதுள்ள தேதிக்கோட்டுப் பகுதியை ஹிஜ்ரிகமிட்டி கிரையப் பத்திரம் செய்து வாங்கிவிட வில்லை என்பதையும் விமர்சிப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே உலகத்தேதிக் கோட்டை மாற்ற வேண்டும் என்று நம்புபவர்கள்தான் அதை மாற்றிக் காட்ட வேண்டும். தற்போது இருக்கும் தேதிக்கோட்டை மாற்றி அமைத்து காட்டிய பின்னரே இந்த விமர்சனத்தை இவர்கள் எழுப்புவது நியாயமாக இருக்கும்.

எனினும் அநியாயக்காரர்கள் கல்வி ஞானமில்லாமல் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள். ஆகவே எவர்களை அல்லாஹ் வழிகெடச் செய்தானோ, அவர்களை நேர் வழியில் கொண்டு வருபவர் யார்? மேலும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லர். அல்குர்ஆன் (30:29)

கிப்லா குறித்து ததஜ பிறைவாசிகளுக்கு நாம் அளித்துள்ள பிற விளக்கங்களையும் அவசியம் பார்வையிடவும்.

கிப்லாவை மாற்றியது யார்?

கிப்லா சம்பந்தமான குர்ஆன் வசனங்கள் கூறுவது என்ன?

பூமியின் மேற்பரப்பில் மத்தியப் பகுதி என்று வரையறுக்க முடியுமா?

பூமியின் மையப்பகுதி மக்கா நகரமா? சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா?

visit: www.mooncalendar.in