கட்டுரைகள்

ஒரு நபித்தோழரின் வாழ்வில்....



அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் இஸ்லாத்தை நன்கு விளங்கி ஏற்றுக் கொண்டவர். தான் பெற்ற சத்தியத்தின் விளக்கத்தை மற்றாரும் பெற வேண்டும்-குறிப்பாக, தன் தாய் பெற வேண்டும் என்பது அவரது தணியாத ஆவல், அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் பல, பிரார்த்தனைகள் பல!.

எனினும் அவரது அன்னையோ எதையும் ஏற்க மறுத்து விட்டார். அதற்காக, அவரும் தனது முயற்சிகளைக் கைவிடவில்லை.

ஒரு முறை, அவர் தனது தாய்க்கு இஸ்லாத்தை விளக்கிக் கூறிக் கொண்டிருந்த பொழுது, போபமுற்ற அவரது தாயார் நபி (ஸல்) அவர்களை நிந்திக்க ஆரம்பித்து விட்டார். அபூஹுரைரா (ரலி) அவர்கள் இதனால் பெரிதும் வேதனையுற்றார். நபிகளாரை சந்தித்து, விவரங்களைக் கூறி, தன் தாய்க்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுமாறு வேண்டி நின்றார்.

''யா அல்லாஹ்! அபூ ஹுரைராவின் அன்னைக்கு நேரான வழியைக் காட்டியருள்வாயாக!'' என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை அல்லாஹ்விடம் ஏற்கப்படும் என்பதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் திடமாக நம்பினார்கள், அந்த உறுதியான நம்பிக்கையுடன் அவர் தன் வீடு நோக்கி நடந்தார்.

வீடு பூட்டிக் கிடந்தது! (தாழ் போடப்பட்டிருந்தது).

அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் காலடிச் சத்தத்தைக் கேட்ட அவரது தாயார், தான் குளித்துக் கொண்டிருப்பதாகவும், சற்று நேரம் வெளியே தாமதிக்கும் படியும் கூறினார்.

சற்று நேரத்தில் வீட்டின் கதவு திறந்து கொண்டது. அத்தோடு, தன் தாயின் உளக் கதவும் இஸ்லாத்திற்காக திறக்கப்பட்டிருப்பதைக் கண்ட அவர் இன்புற்றார், இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள்.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் மற்றாரின் அன்னையர்க்கும் அடிக்கடி பிரார்த்தனைப் புரிபவர்களாக இருந்தார்கள்.



நபி (ஸல்) அவர்களின் வரலாற்று நூலிருந்து